MOHAMED THAVER
Mumbai murder : பள்ளி முதல்வரை கொலை செய்தவழக்கில், 12 வயது பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பையின் இளம்வயது கொலைக்குற்றவாளி என அவப்பெயரை சுமந்துள்ளான்.
மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு மும்பை பகுதியின் சேரிப்பகுதியான சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது பள்ளி மாணவன். படிப்பில் படுசுட்டி என்பதால், பள்ளியில் மட்டுமல்லாது, அந்த பகுதியில் மிகப்பிரபலம். அனைவருக்கும் மிகப்பரிச்சயமானவன். அனைவரிடத்திலும் அதிகம் பழகக்கூடியவன். அவன் கொலைக்குற்றவாளி என்பதை, அப்பகுதியில் உள்ளவர்களால் இன்னமும் நம்பமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சேரிப்பகுதியான சிவாஜி நகர் பகுதியில் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பீகார் உள்ளிட்ட வேறு மாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடிவந்தவர்கள் ஆவர். கொலைகுற்றம் சாட்டப்பட்ட அந்த பள்ளி மாணவனும் பீகாரில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள் தான்.
பள்ளி மாணவனின் தந்தை டெய்லர் ஆக உள்ளார். தாய் வீட்டுவேலைகள் செய்துவருகிறார். அவனின் சகோதர, சகோதரிகள் அந்த பள்ளியிலேயே படித்து வந்தனர். ஒருநாள், மாணவனின் தாய், ஆசிரியரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கடனாக பெற்று வருமாறு கூறியுள்ளார். ஆசிரியர்கள் கைவிரிக்கவே, பள்ளி முதல்வரிடம் போய் கேட்டுள்ளார். அவரும் தரமுடியாது என்று மறுத்துவிட்டார்.
பள்ளி முதல்வர், பள்ளிநேரத்தை தவிர மற்ற நேரங்களில், அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் எடுத்துவந்தார். அன்றைய தினம், இந்த மாணவன் டியூசன் வகுப்பிற்கு சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் வெளியே வந்துவிட்டான். பின் சில மணிநேரங்களுக்கு பிறகு மீண்டும் கையில் கத்தியுடன் டியூசனுக்கு சென்றுள்ளான். அவர் பின்னால் திரும்பி நின்றுகொண்டிருக்கும்போது, கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியுடன் அந்த மாணவர் வெளியேறுவதை டியூசனில் படிக்கும் மாணவி ஒருவர் பார்த்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றபிறகு, அந்த மாணவர், அவரது பெற்றோர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதுதொடர்பாக, சிவாஜி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சேரிப்பகுதி மக்கள், அவர்களின் குழந்தைகள் போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளனர். சிறுவர்களின் பைகளை சோதனை செய்து பார்த்தால், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைவஸ்துகள் நிச்சயம் இருக்கும் என்று அப்பகுதியில் ஆய்வு நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மட்டும் பெற்றோர்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. பள்ளிநேரங்களை தவிர மற்ற நேரங்களில் அவர்கள் எங்கு செல்கிறார்கள், எந்தமாதிரியான நண்பர்களுடன் பழகுகிறார்கள், என்னமாதிரியான உணவுகளை உண்கின்றனர் போன்ற அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், நன்றாக படிக்கும் மாணவரும், இதுபோலத்தான் குற்றவாளி நிலைக்கு தள்ளப்படுவான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.