கர்நாடக மாநிலம் மங்களூரு மற்றும் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மங்களூரு வந்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடலோரப் பகுதியான தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள தரம்சாலாவுக்கு வந்தார். இங்குள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் பாரம்பரிய மரியாதையுடன் அவரை வரவேற்ற தர்மகர்த்தா வீரேந்திர ஹெக்டே ஆலய வளாகத்தை சுற்றி காட்டினார். பயபக்தியோடு மஞ்சுநாதரை வழிபட்ட பிரதமர் மோடி, அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார்.
பின்னர், கர்நாடகாவின் பிடார் - கலாபுராகி இடையே 110 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பின் உரையாற்றிய மோடி, "பெங்களூருவுக்கு வந்து மக்களை பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜம்மு-காஷ்மீருக்கு சுயாட்சி வேண்டுமென ப.சிதம்பரம் பேசியதற்கு காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும். அவரது கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. காஷ்மீரில் சுயாட்சி வேண்டும் என்பவர்களுக்காக காங்கிரஸ் தலைவர்கள் ஏன் குரல் கொடுகின்றனர்? இது நமது தைரியமான ராணுவ வீரர்களை அவமானப்படுத்துவது போன்ற செயலாகும். டோக்லாம் விவகாரத்தில் காங்கிரஸ் பரப்பிய பொய்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்திய மக்கள் அவர்களை மிகவும் நம்பினார்கள்.
நமது துணிச்சலான வீரர்களின் தியாகத்தின் மீது அரசியல் செய்தால், நாடு ஒருபோதும் முன்னேற முடியாது. தனது தவறுகளில் இருந்து காங்கிரஸ் ஒருபோதும் பாடம் கற்றுக் கொள்வதில்லை. திரும்ப திரும்ப காங்கிரஸ் தவறு செய்துக் கொண்டே இருக்கிறது" என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.