மூன்று வண்ண நிறத்தில் கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடியை முதலமைச்சர் சித்தராமையா அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு, கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி வடிவமைக்க 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழு கடந்த பிப்ரவரி 5ந்தேதி கொடி வடிவமைப்பிற்கான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் நேற்று (8.3.18) கொடி வடிவமைப்பு குழு கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், புதிதாக வடிவமைக்கப்பட்ட கொடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டிருக்கும் கொடியை முதல்வர் சித்தராமையா அனைவரின் மத்தியிலும் அறிமுகப்படுத்தினார். கொடியின் மத்தியில் வெள்ளை நிறம் இருப்பதுடன் மாநில அரசின் சின்னம் அதில் இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்தில், கன்னட ஆதரவு அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய பெரியோர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். எந்தவித எதிர்ப்பும் இன்றி முதல்வர் கொடியின் வடிவமைப்பு குறித்து விளக்கினார். கன்னடம் பேசும் மக்களின் பெருமைக்கான அடையாளம் மற்றும் வரலாற்று முடிவு இநத கொடி. அனைத்து கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
மஞ்சள் மன்னிப்பையும், வெள்ளை அமைதியையும், சிவப்பு துணிச்சலையும் காட்டுவதாக கொடி வடிவமைப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.மேலும், இந்த கொடி விரைவில் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படவுள்ளது. மாநிலத்திற்கு என்று தனி கொடி வைத்திருப்பதற்கு எதிராக அரசியலமைப்பு சட்டம் இல்லாத காரணத்தால், இந்த கொடிக்கு மத்திய அரசிடம் இருந்து உடனடியாக ஒப்புதல் கிடைத்துவிடும் என்று முதல்வர் சித்தராமையாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.