’நிதி ஆயோக்’ அமைப்பின் துணை தலைவரான அரவிந்த் பனாகரியா, தம் பதவியை ராஜினாமா செய்தார். பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் மோடியால் நேரடியாக அப்பதவியில் அமர்த்தப்பட்டவராக அரவிந்த் பனாகரியா கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் பனாகரியா செவ்வாய் கிழமை ‘நிதி’ ஆயோக் அமைப்பின் துணை தலைவர் பதவியிலிருந்து செவ்வாய் கிழமை ராஜினாமா செய்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி இவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். அவருடைய ராஜினாமாவிற்கான காரணம் தெளிவாக தெரியாத நிலைமை உள்ளது. எனினும், அமெரிக்காவில் கல்விப்பணியை அவர் மீண்டும் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, அமெரிக்காவில் கொலாம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் பேராசிரியராக கல்விப் பணியாற்றிய நிலையில் தான், அவர் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பதவிக்காக அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எடுத்த விடுமுறை செப்டம்பர் 5-ஆம் தேதியுடன் நிறைவடைவதாகவும், அன்றைய தினம் தான் மீண்டும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிக்கு சேவிருப்பதாகவும் அரவிந்த பனாகரியா தெரிவித்துள்ளார்.
ஏசியன் டெவலப்மெண்ட் வங்கியின் முதன்மை பொருளாதார வல்லுநராகவும், மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில், சர்வதேச பொருளாதார துறையில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
வணிகப் பொருளாதார அறிஞர் ஜகதீஷ் பக்வதிக்கு மிகவும் நெருக்கமானவராக அரவிந்த் பனாகரியா கருதப்படுகிறார்.
பிரதமர் மோடியின் ஆதரவாளரான அரவிந்த் பனாகரியா, குஜராத்தின் முதலைமைச்சராக மோடி பதவி வகித்தபோது அவருடைய பல பொருளாதார நடவடிக்கைகளை அரவிந்த் வெளிப்படையாக பாராட்டியுள்ளார். தன்னுடைய ராஜினாமா முடிவு குறித்து பிரதமர் மோடியிடம் தெரியப்படுத்தியதாகவும் அரவிந்த் பனாகரியா கூறினார்.