Nitin Gadkari more firms should get licences for covid vaccines : கோவிட் தடுப்பூசிகளின் பற்றாக்குறை தொடர்பாக அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த செவ்வாயன்று, தொற்றுநோயை சமாளிக்கத் தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தை மேலும் அதிகமான உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், தகனங்களுக்கு "சிறந்த ஏற்பாடுகளை" செய்யவும் மற்றும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்பு குறித்து அதிருப்தியையும் தெரிவித்தார்.
“தடுப்பூசிகளின் தேவை, வழங்கலை விட அதிகமாக இருந்தால் அது சிக்கலை உருவாக்குகிறது. எனவே, ஒரு நிறுவனத்திற்கு பதிலாக, மேலும் 10 நிறுவனங்களுக்குத் தடுப்பூசி தயாரிக்க உரிமம் வழங்கப்படவேண்டும். முதலில் அவர்கள் உள் நாட்டில் சப்ளை செய்யட்டும். பின்னர், அதிகமான தடுப்பூசிகள் இருந்தால் அவை ஏற்றுமதி செய்யலாம்” என்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு மெய்நிகர் உரையில் கட்கரி கூறினார்.
“ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு மூன்று ஆய்வகங்கள் உள்ளன. அவர்கள் ஒரு சேவையாக அல்ல, 10 சதவீத ராயல்டியுடன் தடுப்பூசிகளைத் தயாரிக்கட்டும்.. இதை 15-20 நாட்களில் செய்ய முடியும்” என்றார்.
கடந்த வியாழக்கிழமை, மத்திய அரசு தனது தடுப்பூசி தயாரிப்பு மற்றும் வழங்குதல் வரைபடத்தை வெளியிடும் போது, தடுப்பூசி இயக்கத்திற்கு மே மாதத்தில் 7.30 கோடி அளவு கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. இவற்றில், மாநிலங்களால் நேரடியாக வாங்கப்படும் 1.27 கோடி அளவுகள் தயாரிப்பு நிலையில் உள்ளன. மேலும் 80 லட்சம் டோஸ் தனியார் மருத்துவமனைகளால் வாங்கப்படுகின்றன.
உடல்களைத் தகனம் செய்வதற்குச் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்திற்கு எழுதுகிறேன் என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் தெரிவித்தார். மேலும் சந்தனக் கட்டைகளுக்கு பதிலாக டீசல், எத்தனால் மற்றும் பயோகேஸ் போன்ற எரிபொருட்களும், மின்சாரமும் பயன்படுத்தினால் தகனங்களின் செலவு குறைக்க முடியும் என்றார்.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஆறுகளில் மிதக்கும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள், தொற்றுநோய்களின் போது தகனங்களில் ஏற்படும் அதிக செலவுகள் குறித்துப் பல புகார்களுடன் பரவலான விமர்சனங்களுக்கு மத்தியில் அவருடைய இந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
"ஒரு நபர் மரணமடைந்தபின் கட்டைகளைக்கொண்டு தகனம் செய்யும்போது, அதற்கு ரூ.3,000 செலவாகிறது. டீசல் பயன்படுத்தினால், அதன் விலை ரூ.1,600, எல்பிஜியில் ரூ.1,200, மின்சாரத்தில் ரூ.750-800 மற்றும் பயோமாஸ் பேலெட்டுகளில் எரிப்பதன் மூலம் ரூ.1,000 செலவாகும்" என்றார்.
"பல்கலைக்கழகங்கள் இதைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம் ... தன்னிறைவு (ஆத்மனிர்பர்), இறக்குமதி மாற்று, செலவு குறைப்பு... இது ஒரு சுதேசி மனநிலையுடன் செய்யப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்து சடங்குகளின்படி அனுமதிக்கப்பட்ட தகனம் தொடர்பான கருத்துகளில் தலையிடப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
கோவிட்டுக்கு உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்க அதிக மருந்து நிறுவனங்களை அனுமதிக்குமாறு, வேதியியல் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் சேர்ந்து பிரதமருக்கு முன்மொழிவேன் என்றும் கட்கரி கூறினார்.
“பார்மா நிறுவனங்கள் 10 சதவீத ராயல்டியை (காப்புரிமைதாரருக்கு) கொடுக்கவும், இந்த உயிர் காக்கும் மருந்துகளை உலக அளவில் கூட தயாரிக்கவும் அனுமதிக்க வேண்டும். இதனை நான் உலக சுகாதார நிறுவனத்திடம் கூறியுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியிடமும் நான் கூறுவேன்” என்றார்.
"மூலப்பொருள் வெளிநாட்டிலிருந்து வருகிறது. காப்புரிமை வெளிநாட்டிலிருந்து தரப்படுகிறது. நாட்டிற்கு மருந்துகள் தேவை. ஆனால், நம்மிடம் அதிகமான மருந்துகள் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த, உற்பத்தியை அளவிட இரண்டு உற்பத்தியாளர்களின் தடுப்பூசி சூத்திரத்தை மற்ற திறமையான மருந்து நிறுவனங்களுடன் மையம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதோடு கட்கரியின் கருத்துக்கள் ஒத்துப்போயின.
இந்தியாவில் இதுவரை, கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்பூட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது மற்றும் நான்காவது அலைகளை சமாளிப்பதற்கான வழிகளைப் பரிந்துரைத்து, அவை வந்தால், ஆக்ஸிஜனைப் பொறுத்தவரை மருத்துவமனைகள் தன்னிறைவு பெற வேண்டும் என்று கட்கரி கூறினார். “ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறக்கின்றனர். இது நல்லதல்ல” என்றும் குறிப்பிட்டார்.
இந்த மாத தொடக்கத்தில், கட்கரியின் அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை, அரசாங்கம் தேர்ந்தெடுத்து, ஆக்ஸிஜன் ஆலைகளின் சிவில் பணிகளுக்கான நோடல் ஏஜென்சியாக நாடு முழுவதும் அதன் நிபுணத்துவத்தையும் தடத்தையும் கொடுத்தது.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள் போன்றவற்றை இருப்பு வைக்குமாறு அனைத்து தன்னார்வ அமைப்புகளுக்கும், மத அமைப்புகளுக்கும் மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்தார். எனவே தேவைப்பட்டால், தன்னார்வலர்கள் உடனடியாக உதவியுடன் மக்களை அணுக முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.