அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என முக்கிய பிரமுகர்களுடன் நீரா ராடியா நடத்திய உரையாடலில் எந்தக் குற்றமும் கண்டறியப்படவில்லை என மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி, நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு, ராடியா டேப்கள் வெளிவருவதைக் கருத்தில் கொண்டு தனியுரிமைக்கான உரிமையைப் பாதுகாக்கக் கோரி தொழிலதிபர் ரத்தன் டாடா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யலாம் என்று கூறினார்
மேலும், “இந்த உரையாடல்கள் அனைத்தையும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது. 14 பூர்வாங்க விசாரணைகள் பதிவு செய்யப்பட்டு, சீலிடப்பட்ட கவரில் அறிக்கை வைக்கப்பட்டது. அவற்றில் குற்றச் செயல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், இப்போது தொலைபேசி ஒட்டுக்கேட்கும் வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளன,” என்று பதி கூறினார்.
தனியுரிமை தீர்ப்பிற்குப் பிறகு இந்த விஷயத்தில் எதுவும் இல்லை என்று சட்ட அதிகாரி கூறினார்.
நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் பிஎஸ் நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, அடுத்த வாரம் அரசியலமைப்பு பெஞ்ச் இருப்பதால், தசரா விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாகக் கூறியது.
இதற்கிடையில், சிபிஐ புதுப்பிக்கப்பட்ட நிலை அறிக்கையை தாக்கல் செய்யலாம்" என்று பெஞ்ச் கூறியது. மேலும், அடுத்த விசாரணையை அக்டோபர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஆரம்பத்தில், டாடா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒத்திவைக்க கோரினார்.
பொதுநல வழக்குகளுக்கான என்ஜிஓ மையம் (சிபிஐஎல்) தாக்கல் செய்த மற்றொரு மனுவும் உள்ளது என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிபிஐஎல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், நீரா ராடியா இரண்டு முக்கிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் லாபிஸ்ட்டாக இருந்ததாகவும், பொதுமக்களிடம் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகள் நடந்ததாகவும் தெரியவந்தது” என்றார்.
தொடர்ந்து, கார்ப்பரேட் ஆதரவாளர் நீரா ராடியாவின் டேப் செய்யப்பட்ட உரையாடல்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் எழும் சிக்கல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் 2013 இல் உத்தரவிட்டது.
முன்னதாக "நீரா ராடியாவின் உரையாடல்கள், அரசு அதிகாரிகளுடன் அந்நிய நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்களின் ஆழமான வேரூன்றிய தீமையை வெளிப்படுத்துகின்றன" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசியல் சாசனத்தின் 21ஆவது பிரிவின் கீழ் தனியுரிமைக்கான உரிமையை உள்ளடக்கிய வாழ்வதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகக் குற்றம் சாட்டி, டேப்கள் கசிந்ததில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டாடா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
நீரா ராடியா ஒரு கார்ப்பரேட் பரப்புரையாளர் என்பதால், வரி ஏய்ப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ராடியாவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அந்த டேப்களை வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
நவம்பர் 16, 2007 அன்று நிதியமைச்சருக்கு அளித்த புகாரின் பேரில், நீரா ராடியாவின் தொலைபேசியைக் கண்காணிப்பதன் ஒரு பகுதியாக இந்த உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன, ஒன்பது ஆண்டுகளுக்குள் அவர் ரூ. 300 கோடி மதிப்புள்ள வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்று குற்றம் சாட்டினார்.
ராடியாவின் 180 நாட்கள் உரையாடல்களை அரசாங்கம் பதிவு செய்தது. அந்த வகையில், முதலில் ஆகஸ்ட் 20, 2008 முதல் 60 நாட்கள் ஒட்டுக்கேட்கப்பட்டன.
பின்னர் அக்டோபர் 19 முதல் மேலும் 60 நாட்கள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தொடர்ந்து, மே 11, 2009 அன்று, ஒரு புதிய உத்தரவைத் தொடர்ந்து அவரது தொலைபேசி மீண்டும் 60 நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.