அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர், தன் ஆண் காதலரை இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
மஹராஷ்டிராவை சேர்ந்த ஹ்ரிஷி மோகன்குமார் அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வியட்நாமை சேர்ந்த வின் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் மஹராஷ்டிராவில் இந்து முறைப்படி கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். ஆரம்பத்தில், ஹ்ரிஷின் பெற்றோர் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இருப்பினும், ஹ்ரிஷ் அவர்களை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.
ஓரின சேர்க்கையை அங்கீகரிக்கும் நாடுகளில் திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் இந்தியாவில் திருமணம் செய்திருக்கின்றனர். இத்திருமணத்தில் அவர்களது நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பாதுகாப்பு கருதி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகே உள்ள ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற்றது.
திருமணம் குறித்து பேசிய ஹ்ரிஷ், “எல்லோரையும் ஒருங்கிணைந்த, சுதந்திரமான கலாச்சாரத்தைக்கொண்டது இந்தியா. ஓரின சேர்க்கையை குற்றமாக்கும் சட்டப்பிரிவு 377-ஐ உருவாக்கியது பிரிட்டிஷ் காலனி அரசு. இதனால், மாற்று பாலின ஆர்வம் கொண்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவை இந்தியாவில் இருக்கக்கூடாது”, என கூறினார்.