வரதட்சணை வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு என்ற சட்டம் இந்திய நாட்டில் மிகக் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும் ஒன்று. வரதட்சணை துன்பத்தால், பல பெண்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் குறித்தும் நாம் அறிந்திருப்போம். வரதட்சனை கேட்டு பல அப்பாவி பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஆண்களுக்கு மத்தியில், தனித்து நிற்கிறார் ஒடிசா மாப்பிள்ளை.
ஒடிசா மாநிலம் கேந்திராபுரா மாவட்டத்தில் அமைந்துள்ள பாலபத்ரபூர் கிராமத்தில் வசிப்பவர் சரோஜ் காந்த் பிஸ்வால். இவர் அந்தக் கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் மற்றொரு ஆசிரியை ரேஷ்மி ரேகா என்பவருக்கும் சமீபத்தில் நிச்சியம் செய்து வைக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் கடந்த வாரம் 22ம் தேதி நடைபெற்றது. இந்தத் திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்துமாறு மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் மாப்பிள்ளை. ஆனால் ஒரு நிபந்தனையும் பெண் வீட்டாருக்குக் காத்திருந்தது. என்னவாக இருக்கும் என்று பதற்றமடைந்த பெண் வீட்டாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் அவர். வரதட்சணை எதையாவது எதிர்பார்க்கிறாரா என்று பெண்ணின் தந்தை கேட்டதற்கு, “1500 மரக்கன்றுகளை வரதட்சணையாக கொடுங்கள். எங்கள் திருமணத்தின் காதல் சின்னமாகவும், இயற்கை செழிக்கவும் கிராமம் முழுவதும் மரம் நடலாம்.” என்று கூறினார்.
ஆசிரியர் சரோஜின் வரதட்சணை கோரிக்கையை கேட்ட பெண் வீட்டாருக்கு அவர் மதிப்பும் மரியாதையும் கூடியுள்ளது. எவ்வித நிராகரிப்பும் இல்லாமல், மாப்பிள்ளை கேட்ட 1500 மரக்கன்றுகளை வரதர்சனையாக அளித்துள்ளார். குறிப்பாக கல்யாணப் பெண் ரேஷ்மி, தான் திருமணம் செய்யும் நபர் இவ்வளவு பொதுநலம் கொண்டவர் என்று அறிந்ததைக் கண்டு கண்கலங்கினார்.
பின்பு ஜூன் 22ம் தேதி நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற அனைத்து விருந்தாளிகளுக்கும், மரக்கன்றுகளை பரிசாகக் கொடுத்துள்ளனர் இளம் ஜோடிகள். இந்த நிகழ்வால் கிராமத்தில் உள்ளவர்கள் மற்றும் இரு குடும்பத்தினரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரதட்சணை வாங்குவது தவறு என்றும், மரங்கள் மற்றும் இயற்கை வளங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இவர்கள் திருமணம் நிரூபித்துள்ளதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.