தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தகுதி நீக்கம் செய்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றபோது, ஆம் ஆத்மியை சேர்ந்த நரேஷ் யாதவ், சோம் தத், பிரவீன் குமார், நிதின் தியாகி உள்ளிட்ட 20 எம்.எல்.ஏ.க்கள் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற செயலாளர் பொறுப்பு துணை முதலமைச்சருக்கு இணையான பதவியாகும். இந்நிலையில், எம்.எல்.ஏவாக இருக்கும் அதே நேரத்தில் தங்களுக்கு ஆதாயம் தரும் வகையில் நாடாளுமன்ற செயலாளர் பதவியை ஏற்றதாக 20 எம்.எல்.ஏ.க்கள் மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்நிலையில், 20 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையமானது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தகுதி நீக்கம் செய்தார்.
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என, குடியரசு தலைவரிடம் முறையிடுவோம் என, துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், 70 தொகுதிகள் உள்ள டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அக்கட்சி பெரும்பான்மையை தக்க வைக்கும்.
எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட பதவிகளை வகிப்பவர்கள் இரட்டை ஆதாயம் பெறும் வகையில் வேறொரு பதவியை வகிக்கக்கூடாது. அப்படி வகிப்பவர்களின் பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.