குஜராத் மாநிலம் சூரத்தில் தந்தைகளை இழந்த 251 பெண்களுக்கு, பெரும் தொழிலதிபர் ஒருவர் தன் பொருட்செலவில் திருமணம் செய்துவைத்தார்.
தொழிலதிபரும், வைர வியாபாரியுமான மகேஷ் சவானி, தந்தையில்லாத 251 பெண்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைத்தார். இதில், 5 முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஜோடிகளும், ஒரு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஜோடியும் இருந்தனர். அவர்களுக்கு அவரவர் மத சடங்குகளின்படி திருமணம் நடைபெற்றது. மேலும், இந்த திருமண நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையில்லாத பெண்களுக்கு திருமண செலவுகளை சந்திப்பது கடினமானது என்பதால், அதனை தன் கடமையாக கொண்டு அப்பெண்களுக்கு தந்தையின் இடத்திலிருந்து தொழிலதிபர் மகேஷ் சவானி திருமணம் செய்துவைக்கிறார்.
கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பதை அவர் கடமையாக கொண்டிருக்கிறார்.
திருமணமான பெண்களுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் அவர் வாங்கி கொடுக்கிறார்.