பாகிஸ்தானில் லாகூரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் 39 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் லாகூரில், பஞ்சாப் மாகாண முதல்வர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர் என்றும், 39 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
போலீஸ் மற்றும் லாகூர் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் அர்பா காரிம் டவருக்கு வெளியே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தற்கொலைப் படைத்தாக்குதல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், போலீஸாரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. லாகூரில் தீவிரவாத தாக்குதல் நடந்துவருவது தொடர்கதையாகி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.