பஞ்ச்குலா கலவரத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வன்முறைக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான இந்த வழக்குகள் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை குறித்த விவரம் வருகிற 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், 1000-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில முதலமைச்சர்களிடம் நிலவரத்தை கேட்டறிந்தார். இந்தநிலையில் இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி காக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.