கலாநிதி மாறனுக்கு ரூ 579 கோடி வழங்கவேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
சன் குழும தலைவரான கலாநிதி மாறன், ‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவனத்தில் 58.46 சதவிகித பங்குகளை வைத்திருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு கலாநிதி மாறன் அந்தப் பங்குகளை ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனர்களில் ஒருவரான அஜய்சிங்கிடம் விற்றார். இந்த பங்கு பரிவர்த்தனைகளில் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கலாநிதி மாறன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கடன் தவணைகளை செலுத்திய வகையிலும், தான் மேற்கொண்ட சில நடைமுறை செலவுகளை ஈடு செய்யும் வகையிலும் தனக்கு 570 கோடி ரூபாயை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்கவேண்டும் என தனது மனுவில் கலாநிதி கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 250 கோடி ரூபாயை பணமாகவும், 329 கோடி ரூபாயை வங்கி காப்புறுதியாகவும் கலாநிதி மாறனுக்கு வழங்க அஜய்சிங்கிற்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அஜய்சிங், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரலும் சீனியர் வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி, மற்றொரு சீனியர் வழக்கறிஞரான ஹரிஷ் சால்வே ஆகியோர் ஆஜராகி வாதாடினர். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2000 கோடி ரூபாய் கடனில் இருப்பதாகவும், கலாநிதி மாறன் நிர்வாகப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதாகவும் அவர்கள் வாதிட்டனர். கலாநிதி மாறன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக்மனு சிங்வி ஆஜரானார்.
நீதிபதிகள் ரோகிண்டன் நாரிமன், எஸ்.கே.கவுல் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். ஜூலை 28-ம் தேதி (நேற்று) இதில் தீர்ப்பு கூறிய நீதிபதிகள், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தனர். அதன்படி, கலாநிதி மாறனுக்கு 579 கோடி ரூபாயை ஸ்பைஸ்ஜெட் வழங்கவேண்டும். இந்த உத்தரவு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.