ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் தலை தூக்கியிருக்கும் நிலையில், அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் மணியை இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் உள்ளிட்ட 5 மதத்தவர்கள் சேர்ந்து ஒலித்து இசையெழுப்பினர்.
ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஹோலி ஃபேமிலி என்ற கத்தோலிக் தேவாலயம், 1896-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், 1967-ஆக் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் இந்த தேவாலயத்தின் மணி சேதமடைந்தது. இந்நிலையில், 50 ஆண்டுகள் கழித்து உள்ளூரில் உள்ள கிறிஸ்துவ குடும்பத்தினர் அளித்த நன்கொடையால் தேவாலயத்திற்கு புதிய மணி பொருத்தப்பட்டது.
இந்த மணி, உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்திலிருந்து தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. 105 கிலோ கொண்ட இந்த மணி, கடந்த 29-ஆம் தேதியன்று தேவாலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு பொருத்தப்பட்டது. இந்த விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, புத்த, சீக்கிய மதத்தை சேர்ந்த ஐவர் சேர்ந்து, மணியை ஒலித்து இசையெழுப்பினர்.
"நாம் வேறு வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், காஷ்மீர் மக்கள் என்ற பெயரால் ஒன்றிணைந்து மத நல்லிணக்கத்துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்”, என விழா ஒருங்கிணைப்பாளர் சிட்னி மார்க் ராத் தெரிவித்தார்.