நெஞ்சை பதை பதைக்க செய்யும் இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்துள்ளது.
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அரசு அறிவியல் கல்வி நிறுவனத்தில் பி.ஹெச்டி பயின்று வந்தவர் 30 வயதான கஜனன் முண்டே.
இவர் அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்துவந்துள்ளார். இந்நிலையில் மாணவியிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு மாணவி சம்மதிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், திங்கள்கிழமை (நவ.21) சம்பவத்தன்று மாணவி பேராசிரியர் ஒருவர் அறைக்கு சென்றுள்ளார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற கஜனன் முண்டே, பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோல்-ஐ தனது உடலில் ஊற்றிக் கொண்டு, லைட்டர் மூலம் தீயை பற்ற வைத்து மாணவியை கட்டிப்பிடித்துள்ளார்.
மாணவி மற்றும் கஜனனின் அலறல் சப்தம் கேட்டு, கல்லூரியில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கஜனன் முண்டே உடல் கருகி சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார்.
மாணவி தீக் காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாணவிக்கு 55 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஒஸ்மான்புரா காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil