சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் இருப்புத் தொகை மதிப்பானது முந்தைய ஆண்டுகளை விட 2017ம் ஆண்டு 50% அதிகரித்திருக்கின்றது. இது குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் “சுவிஸ்ஸில் வைக்கப்பட்டிருக்கும் பணம் அனைத்தும் கருப்புப் பணம் இல்லை” என்று கூறியிருக்கின்றார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “நீங்கள் எதன் அடிப்படையில், அங்கிருக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணம் என்று கூறுகின்றீர்கள்” என்று வினா எழுப்பியுள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் இருக்கும் 40% பணமானது, லிபரலைஸ்ட் ரெமிட்டன்ஸ் ஸ்கீம் மூலமாக அங்கு டெபாசிட் செய்யப்பட்ட பணமாகும். இந்தியர் ஒருவர் வெளிநாடுகளில் இருக்கும் தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு சுமார் 2,50,000 டாலர்கள் வரை அனுப்ப இயலும்.
“இந்தியா சுவிட்சர்லாந்து நாட்டுடன் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் படி, 2018ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி வரையிலான அனைத்து விபரங்களையும் அனுப்பும். நிதி ஆண்டு முடிவடையும் போது அவ்வறிக்கை அறிவிக்கப்படும். அதன்படி யாராவது கருப்புப் பணத்தினை டெபாசிட் செய்திருக்கின்றார்கள் என கண்டறிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
2017 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 1.46 ட்ரில்லியன் சுவிஸ் பிரான்க் பணம் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இந்தியாவின் பங்கு மட்டும் 1.02 மில்லியன் சுவிஸ் பிரான்க் (ரூபாய் 7000 கோடி) ஆகும்.