PM Narendra Modi and Joe Biden talk : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றனர்.அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளனர்.
இதையடுத்து, வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் தொடங்கி உள்ளார்.ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இருவருக்கும் உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது, இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். அதுமட்டுமின்றி கொரோனா, காலநிலை மாற்றம், இரண்டு நாடுகளின் ஒற்றுமை குறித்து ஆலோசனை செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவரது வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க வம்சாவளி உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமை மற்றும் உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”