pratap sarangi minister : நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் ஒடிசாவில் பாலசோர் தொகுதியில் நின்று மக்களிடம் அமோக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பிரதாப் சந்திர சாரங்கி மொத்த மீடியாக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவைக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் மோடியின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழிநிற்கும் மத்திய அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்யப்பட்டது. 25 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், 9 பேர் சிறப்பு அமைச்சர்களாகவும் என 58 பேர் மொத்தம் பதவியேற்றனர்.
இதில் நாட்டில் மிகவும் ஏழையான எம்பி என அழைக்கப்படும் பிரதாப் சந்திர சாரங்கி அமைச்சராக பதவியேற்கும் போது எல்லா கேமாராக்களும் ஒருசேர திரும்பினர். மிகவும் ஏழையான தோற்றம் இவர் தான் ஒடிசா மோடி.
இவருக்கு சொந்தமான சொத்துக்கள் 2. சுவர் எழுப்பாத குடிசை வீடு,அவர் வெளியில் சென்று வர பழைய சைக்கிள். இந்த சைக்கிளில் தான் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து 45 நாட்கள் செய்தார் பிரதாப் சாரங்கி. ஆன்மிகத்தின் மீது அளவுக்கடந்த நாட்டம் கொண்ட சாரங்கி ராமகிருஷ்ண மடத்தில் சேவை பணிகளை செய்து வந்தார். துறவியாகவும் ஆசைப்பட்டு திருமணமே செய்துக் கொள்ளாமல் வாழ்ந்தார்.
மலைவாழ் மக்களுக்காக பலாசூர், மயூர்கஞ்ச் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்களை தொடங்கி உள்ளார். இவரை ஒடிசா மக்கள் ஒடிசா மோடி என்று அழைப்பதற்கும் இவரின் ஏழ்மை மற்றும் சேவை குணங்களே காரணம். பலருக்கும் தெரியாத தகவல் இவர் நீலகிரி சட்டசபை தொகுதியில் தேர்வாகி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் தேர்தலில் நின்ற போது பலாசோர் தொகுதி மக்கள் இவரை கைவிட்டனர். தற்போது மீண்டும் அதே தொகுதியில் நின்று ஜெயித்துக் காட்டியுள்ளார். சாரங்கிக்காக மோடி ஸ்பெஷலாக சென்று அந்த தொகுதியில் பிரச்சாரமும் மேற்கொண்டார். பாராளுமன்றத்துக்கு தேர்வான முதல் முறையே இவரை அமைச்சராக்கி அழகுப் பார்த்துள்ளார் நரேந்திர மோடி.
பதவியேற்புக்காக ஒடிசாவில் இருந்து வெறும் ஜோல்னா பையுடன் சாரங்கி வந்து இறங்கியுள்ளார்.அவரின் எளிமையை கண்டு மொத்த அமைச்சரவையுமே ஆச்சரியம் அடைந்தார்களாம். மாற்று உடைக் கூட கொண்டு வராமல் காலையில் வந்து இறங்கிய உடையிலேயே இரவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் சாரங்கி.
இவர் அமைச்சராக பதவியேற்ற போது அரங்கத்தில் கைத்தட்டல்கள் அதிர்ந்துள்ளன. இதை மோடியும் கவனித்துள்ளார். பதவியேற்புக்கு பின்பு எந்தவித முகபாவனையும் முகத்தில் காட்டாமல் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் அமைதியாக அமர்ந்தார் ஒடிசா மோடி.
இவரின் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கோ, அஞ்சல் சேமிப்பில் அக்கவுண்ட் கூட இல்லை. ஆனால் பாலசோர் தொகுதியில் சாரங்கி தோற்கடித்தது மிகப் பெரிய கோடீஸ்வர வேட்பாளரை. சாரங்கியின் எளிமை புரட்சி தான் அவர் ஜெயிக்க காரணமாக இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஒடியா ஆகிய 4 மொழிகளில் சரளமாக பேசும் இவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஆவார்.
சாரங்கியின் இந்த மக்கள் சேவையும், எளிய வாழ்க்கையும் தான் அவரை நாடு அறிய செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.