தகுதியிருந்தும் விசா மறுக்கப்பட்டதால் ஸ்காட்லாந்தில் இருக்கும் தனது கணவருடன் சேர முடியாமல், இந்திய பெண் ஒருவர் அவதியுற்று வருகிறார்.
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தை சேர்ந்தவர் அலெக்ஸாண்ட்ரியா ரிண்டோல் (வயது 22). ஸ்காட்லாந்தை சேர்ந்த பாபி என்பவர் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பாபிக்கும், அலெக்ஸாண்ட்ரியாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். அலெக்ஸாண்ட்ரியா தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், பாபி தற்போது ஸ்காட்லாந்தில் உள்ளார். தம்பதிகள் இருவரும் திருமணமாகி முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஸ்காட்லாந்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, அலெக்ஸாண்ட்ரியா ஸ்காட்லாந்துக்கு விசா விண்ணப்பித்துள்ளார். இங்கிலாந்து குடியேற்ற சட்டப்படி விசா கிடைக்க உயர் ஆங்கிலம் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது கட்டாயம்.
ஏற்கனவே, ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ள அலெக்ஸாண்ட்ரியா அந்த தேர்வில் தகுதி மதிப்பெண்களைவிட, அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனாலும் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது.
அங்கீகாரம் பெற்ற மையத்தில் தேர்வெழுதாததால் விசா மறுக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டு உள்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆங்கிலத்தில் பட்டம் முடித்து மிகுந்த புலமை பெற்றுள்ள அலெக்ஸாண்ட்ரியாவால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால், திருமணமாகி முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒன்றாக கொண்டாட முடியாதோ என, அலெக்ஸாண்ட்ரியா மற்றும் கணவர் பாபி இருவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும், இந்த சிக்கல்கள் தீர்ந்து விசா கிடைப்பதற்குள் குழந்தை பிறந்துவிடுமோ என்ற கலக்கமும் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தன் முகநூல் பக்கத்தில், “நான் என்னுடைய வீட்டுக்கு சென்று கணவருடன் சேர வேண்டும்”, என அலெக்ஸாண்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கூறியுள்ள பாபி, “என் மனைவ, குழந்தை, குடும்பத்திற்காக பணம் செலவிட வேண்டிய நேரத்தில், விசாவுக்காக அதிக பணத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறேன்”, என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.