ஷீரடியில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் பிரபல ஷீரடி சாய் பாபா திருக்கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பாபா திருக்கோயில் செல்வதற்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.
இந்நிலையில், அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து ஷீரடியில் விமான நிலையம் அமைக்க மஹாராஷ்டிர அரசாங்கம் முடிவு செய்து, ஷீரடி அருகில் விமான நிலையம் அமைக்கப்பட்டது.
ரூ.350 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், 2,500 மீட்டர் நீள ஓடுபாதை கொண்டதாகும், இது ஏர்பஸ் ஏ-320 மற்றும் போயிங் 737 போன்ற சிறிய ரக விமானங்கள் வந்து இறங்கும் வசதி கொண்டது.
2,750 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய கட்டடம் 300 பயணிகளை கையாளும் வசதி கொண்டதாகும்.
கடந்த செப்.,22-ஆம் தேதி, இந்த விமான நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றது எனக்கூறி, விமானப் போக்குவரத்து இயக்குனரகம் இதற்கு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து, வணிக ரீதியிலான போக்குவரத்து இன்று மாலை தொடங்க உள்ளது. ஷீரடி விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு முதல் விமான சேவையை ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனம் இயக்க உள்ளது.
இந்த ஆண்டு சாய் பாபா ஜீவ சமாதி அடைந்த 100வது ஆண்டாகும், இதனை முன்னிட்டு இந்த விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாய்பாபா கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 60,000 பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இந்த விமான நிலையம் மூலமாக 12 முதல் 14 சதவீத பக்தர்களை ஈர்க்க முடியும் என கருதப்படுகிறது.
இந்த விமான நிலையம் அமைக்க ரூ.50 கோடியை சாய் பாபா கோவில் நிர்வாகம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விமான நிலைய வசதி மூலம், ஷீரடியில் இருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக ஐந்து மணி நேரம் செய்யக்கூடிய பயண நேரம் தற்போது 40 நிமிடங்களாக குறைகிறது.