அரசு வழங்கிய தேசிய விருது தனக்கு தேவையில்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு நிறைய பிரபலங்கள் வெளிப்படையாக பல அதிரடி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த பிரபலங்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், "ஜெயலலிதா இறந்த பிறகு தான் பேசுவதற்கு தைரியம் வந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன்" என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மவுனமாக இருப்பதன் மூலம், தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற கொடூர சம்பவங்களில் மோடி மவுனமாக இருந்தால், தன்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்கவும் தயங்க மாட்டேன் எனவும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
முன்னதாக, மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவா எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கர்நாடக சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரகாஷ் ராஜும், கவுரி லங்கேஷும் நீண்ட கால நபர்கள் ஆவர். "கடந்த 35 ஆண்டுகளாக நானும் கவுரியும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளோம்" என பிரகாஷ் ராஜ் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.