Advertisment

ஜீவஜோதி கணவர் கொலைவழக்கு : சரவண பவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா? என கண்டித்த நீதிபதிகள், ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today

Tamil Nadu news today

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் சரணடைவதிலிருந்து விலக்கு கோரிய ராஜகோபாலின் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisment

சரவண பவனில் வேலை பார்த்த மேலாளர் ராமசாமியின் மகள் ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்ய முற்பட்டு அதற்கு இடைஞ்சலாக இருந்த அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை,சரவண பவன் அதிபர் ராஜகோபால், கடந்த 2001 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொலை செய்தார். இது தொடர்பாக சரவண பவன் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேர் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கடத்த 2004 ஆம் ஆண்டு அனைவருக்கும் தண்டனை வழங்கிய நிலையில், அதை எதிர்த்து மனுதாரர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு,ராஜகோபால், டேனியல், கார்மேகம்,ஜாகிர் உசேன், காசி விஸ்வநாதன்,பட்டு ராஜன் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தமிழ் செல்வன்,சேது, முருகானந்தம் உள்ளிட்ட மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், பாலு, ஜனார்த்தனன் உள்ளிட்ட இருவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து மனுதாரர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் கடந்த மார்ச் மாதம் தண்டனையை உறுதி செய்ததோடு, அனைவரும் ஜுலை 7 ம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சரணடைய காலக்கெடு முடிவடைந்த நிலையில், சரவண பவன் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் சார்பில் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆஜராக அவகாசம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த இருவரை தவிர டேனியல், கார்மேகம் உள்ளிட்ட மற்ற 9 பேர், சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தானேந்திரன் முன் நேற்று ஆஜரான நிலையில், அவர்கள் அனைவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி ராஜகோபால் சரணடைய கூடுதல் கால அவகாசம் அளிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 9ம் தேதி) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சரணடைய கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற ராஜகோபாலின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர் உடனடியாக சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டது.

ஒருநாள் கூட உங்களால் சிறையில் இருக்க முடியாதா? என கண்டித்த நீதிபதிகள், ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment