உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது புதுச்சேரி அரசு கொறடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீன்றம் தீர்ப்பளித்தது. கடந்த மார்ச் 16ம் தேதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
கடந்த 29ம் தேதியுடன் இந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், இன்று வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக 3 மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவ மாணவிகள் என பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதுமே தற்போது போராட்டக் களமாக மாறியிருக்கிறது. ஆளுங்கட்சியான அதிமுக இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கடந்த மூன்று நாட்களாக ரயில் மறிப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசு தாக்கல் செய்த அந்த மனுவில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதம் செய்வதால் காவிரி டெல்டா பாசன பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. மேலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியது என்றும் குறிப்பிட்டு இருந்தது.
இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏப்ரல் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில அரசு கொறடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அரசுக்கு பதில் அரசு கொறடா சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
முன்னதாக, ‘காவிரி நீா் முழுமையாக கிடைக்காததால், புதுச்சோி மாநிலத்தின் காரைக்கால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் காவிாி மேலாண்மை வாாியம், காவிாி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டியது அவசியம். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மேலாண்மை வாாியம் அமைக்க உாிய துறைக்கு அறிவுருத்த வேண்டும்’ என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.