பூனேவில் பிறந்து பத்து நாட்களே ஆன பெண் குழந்தையை, அக்குழந்தையின் தாயே
ஆற்றில் தூக்கி எறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பூனேவை சேர்ந்த ரேஷ்மா ஷேக் (வயது 26) என்ற பெண் கடந்த புதன் கிழமை காவல் நிலையத்தில் தன்னுடைய பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை, முலா ஆற்றின் அருகே ஆட்டோவில் தன் பக்கத்திலிருந்த பெண் ஒருவர் தூக்கி வீசி எறிந்ததாகவும், பின்பு குழந்தையை ஆட்டோ ஓட்டுநருடன் சேர்ந்து கடத்திக்கொண்டு சென்றுவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
ஆனால், அப்பெண் கூறுவதுபோன்று சிசிடிவி காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. அந்த சிசிடிவி காட்சியில், அப்பெண் முலா ஆற்றின் அருகே குழந்தையுடன் நின்றுகொண்டிருப்பதுபோலவும், அதன்பின் குழந்தை இல்லாததுபோன்று மட்டுமே காட்சிகள் பதிவாகியிருந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, ரேஷ்மா ஷேக்கிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை முலா ஆற்றில் வீசி எறிந்து கொலை செய்ததை அப்பெண் ஒப்புக்கொண்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மேலும், ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று இறந்துவிட்டது. ஏற்கனவே மகள் உள்ள நிலையில், பெண் குழந்தை பிறந்ததால் அதனை வேண்டாம் எனக்கருதி அப்பெண் கொலை செய்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அப்பெண் மீது கொலை, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர். அந்த குழந்தையின் சடலம் இன்னும் கிடைக்கவில்லை.