தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "2017 முதல் 2021 வரை தமிழக ஆளுநராக பணிபுரிந்தேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 40-50 கோடிக்கு விற்கப்படும் சூழல் இருந்தது.
நான் அங்கு ஆளுநராக இருந்தபோது சட்டப்படி, 27 துணைவேந்தர்களை நியமனம் செய்தேன். அதனால் இதுபோன்ற பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் யார் திறமையானவர், யார் திறமையற்றவர் என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் கல்வியின் தரம் உயர வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம்" என்று கூறினார்.
ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் லூதியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சத்பீர் சிங் கோசல் என்பவரை அம்மாநில அரசு நியமித்தது. இந்த நியமனம் சட்டவிரோதமானது எனவும் அவரை நீக்கக் கோரி முதலமைச்சர் பகவந்த் மானுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடிப்பதாக தகவல் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“