டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ராஜஸ்தானில் தன்னை 23 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புகாரில் கூறப்பட்டுள்ளதாவது,
டெல்லி நியூ ஃப்ரெஞ்சு காலனியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர், தனக்கு சொந்தமாக ராஜஸ்தான் மாநிலம், பிகானர் மாவட்டத்தில் உள்ள காட்டூ ஷாம்ஜி கோவில் அருகே உள்ள வீட்டு மனையை பார்வையிட சென்றார்.
வீட்டுமனையை பார்த்துவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்புவதற்காக, ஜெய்ப்பூர் சாலையில் உள்ள காருஷ்யா மந்திர் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த இருவர் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி பலானா கிராமத்திற்கு கொண்டு சென்று தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகாரில் குற்றம்சாட்டினார். அவர்களது பெயர் ராஜூ மற்றும் சுரேஷ் எனவும் குற்றம்சாட்டினார்.
அவர்கள் இருவரும், தன் நண்பர்கள் 6 பேரை அழைத்ததாகவும், அவர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் அளித்தார். இப்படியாக, தன்னை மொத்தம் 23 பேர் பாலியல் வன்கொடுமை செய்து, அதிகாலையில் தன்னை கடத்திவந்த சாலையிலேயே கிடத்திவிட்டு சென்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து, பிகானர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம்பெண்ணை 23 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.