பிரபல கிரிக்கெட் வீரர், ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா சோலங்கி, குஜராத்தில் நடந்த விழாவில் நேற்று பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்.
புதிதாக கட்சியில் இணைந்துள்ள ரிவபாவுக்கு, பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் இவரது காரில் மோதிய போலீஸ் கான்ஸ்டபிளை அடித்ததால் பரபரப்பாக பேசப்பட்டார். பிறகு, அக்டோபர் மாதம் 'கர்ணி சேனா’ என்ற அமைப்பில் இணைந்து, அந்த அமைப்பின் பெண்கள் பிரிவுத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவர் தலைவராக இருக்கும்போது தான் தீபிகா படுகோனின் ’பத்மாவத்’ படத்துக்கு எதிராக இந்த அமைப்பு போராட்டம் நடத்திப் பிரபலமானது.
இந்நிலையில் குஜராத் மாநிலம், ஜாம்நகரில் நடந்த பா.ஜ.க விழாவில், விவசாயத்துறை அமைச்சர் ஃபால்டு முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
ஜாம்நகர் ஜடேஜாவின் சொந்த ஊர். இருப்பினும் அவர் ரெஸ்டாரெண்ட் நடத்தி வரும் ராஜ்கோட்டில் தான் தனது மனைவி ரிவபாவுடன் வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார்.
கடந்த 2016-ல் ரிவபாவை மணந்தார் ஜடேஜா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இன்று நலத்திட்டங்களை துவக்கி வைக்க, ஜாம்நகர் வருகிறார் மோடி. அதனால், லோக் சபா தேர்தலை மனதில் வைத்து தான் கட்சியில் ரிவபா இணைந்திருக்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.
தவிர, ”குஜராத், ஜாம் நகர் மக்களுக்கு இவர் மிகவும் பரிட்சயம். அதனால் இவரின் வருகை கட்சிக்கு இன்னும் வலு சேர்க்கும்” என்கிறார் பா.ஜ.க-வின் ஜாம்நகர் தலைவர் ஹஸ்முக் ஹிந்தோச்சா.