மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தை பிரதமர் மோடி அக்டோபர் 21-ம் தேதி அறிவித்தார். இதில் முதற்கட்டமாக 75,000 பேருக்கு பணி நியமனம் நேற்று வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயனர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை ஐ.சி.எப்.பில் உள்ள அம்பேத்கர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 250 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார். சென்னையில் மொத்தம் 250 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது.
தெற்கு ரயில்வே துறை பணிக்கு 85 பேரும், கடலோரக் காவல்படைக்கு 52 பேரும், பணியாளர் மாநில காப்பீடு நிறுவனத்தில் 25 பேரும், சுங்கத்துறையில் 18 பேரும், இந்தியன் வங்கியில் 17 பேரும், வருமான வரித்துறையில் 15 பேரும், மத்திய ரிசர்வ் காவல் படையில் 10 பேரும், ஏனைய மத்திய அரசு துறைகளில் தலா ஒருவரும் பணி ஆணை பெற்றனர். நியமன ஆணை பெற்றவர்களில் 85 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
நியமன ஆணை பயனாளர்கள் சிலர் மேடையில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, வருமான வரித்துறையில் ஆய்வாளர் பணி கிடைத்த திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது ஷகில் என்பவர் பேசும்போது, ஆங்கிலத்தில் தன்னை அறிமுகப்படுத்தினார். அப்போது நிர்மலா சீதாராமன் அவரிடம் நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் எனக் கேட்டார். அதற்கு தான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கூறினார். உடனே நிர்மலா சீதாராமன் அவரிடத்தில், 'நீங்கள் தமிழிலேயே பேசுங்கள்' என்றார்.
இதேபோல், கடலோர காவல்படையில் பணி ஆணை பெற்ற சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் முதலில் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கி, பின்னர் தமிழில் நான் பேசலாமா என அமைச்சர் நிர்மலா சீதாராமனிடத்தில் கேட்டார். அதற்கு 'சந்தோஷமாக நன்றாக தமிழில் பேசுங்கள்' எனக் கூறினார். தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பு, மும்மொழி கொள்கை தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசிடத்தில் மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நிகழ்ச்சியில் அமைச்சர் தமிழில் பேச சொல்லியது கவனம் பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“