இந்தியாவின் மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழு, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ கோவிட் -19 தடுப்பூசிக்கு சில நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்க பரிந்துரைத்துள்ளனர். இது நாட்டில் மூன்றாவது தடுப்பூசி கிடைக்க வழி வகுத்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.சி.ஓ) நிபுணர் குழு (எஸ்.இ.சி) திங்கள்கிழமை டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் ஸ்பூட்னிக் வி-க்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தது குறித்து விவாதித்தது.
“பல்வேறு ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு அவசரகால சூழ்நிலைகளில் பயன்பாட்டிற்கு கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்குவதற்கான விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு பரிந்துரை செய்தது” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
இந்த பரிந்துரைகள் இறுதி ஒப்புதலுக்காக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ) அனுப்பப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கோவிட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகாவின் கோவிஷீல்ட் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் கிடைக்கும் 3வது COVID-19 தடுப்பூசி இதுவாகும். இது புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் தயாரிக்கப்படுகிறது.
அடுத்த ஆறு மாதங்களில் நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்காக சுமார் 10 கோடி தடுப்பூசி (ஸ்பூட்னிக் வி) இறக்குமதி செய்யப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு கோவிட்-19-ஐத் தடுப்பதற்கான செயலில் உள்ள நோய்த்தடுப்புக்கு சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், 21 நாட்கள் இடைவெளியில் தலா 0.5 மில்லி என இரண்டு அளவுகளில் வழங்கப்படும். இந்த தடுப்பூசியை இதை -18 டிகிரி செல்சியஸில் சேமித்து வைக்க வேண்டும்.
எஸ்.இ.சி-யின் பரிந்துரைகளின்படி, கூட்டத்தின் போது வழங்கப்பட்ட சமீபத்திய பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவு மற்றும் பிற பரிந்துரைகளை இணைத்த பின்னர் திருத்தப்பட்ட சரியான தாள்களை சி.டி.எஸ்.சி.ஓ-விடம் சமர்ப்பிக்குமாறு நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது என்று மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், இந்தியா மற்றும் ரஷ்யாவில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனைகளிலிருந்து பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் தரவை நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
முதல் 2 மாதங்களுக்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கும், அதன்பிறகு மாதந்தோறும் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனை முடிவடையும் வரை உரிய பகுப்பாய்வுடன் ஏ.இ.எஃப்.ஐ மற்றும் ஏ.இ.எஸ்.ஐ-இன் தரவு உள்ளிட்ட பாதுகாப்புத் தரவை இந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் 1 மற்றும் பிப்ரவரி 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களில் டாக்டர் ரெட்டியின் விண்ணப்பத்தை எஸ்.இ.சி முன்பு மதிப்பாய்வு செய்தது.
ஜைடஸ் காடிலா, பயோலாஜிகல் இ மற்றும் ஜென்னோவா ஆகியவற்றால் உருவாக்கப்படும் 3 கோவிட்-19 தடுப்பூசிகளும் ஆய்வில் உள்ளன. அவை இந்தியாவில் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் முன்பு கூறியது.
உலகளாவிய சுகாதார நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் தனது ஒரு முறை மட்டுமே போடக்கூடிய கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை நாட்டில் தொடங்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஸ்பட்னிக் V-இன் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இந்தியாவில் அதன் விநியோக உரிமைகளுக்காக டாக்டர் ரெட்டி ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (RDIF) கூட்டு சேர்ந்தார்.
3 கட்ட மருத்துவ பரிசோதனையின் இடைக்கால பகுப்பாய்வில் ஸ்பூட்னிக் வி 91.6 சதவீத செயல்திறன் அளவை நிரூபித்துள்ளது. இதில் ரஷ்யாவில் 19,866 தன்னார்வலர்களின் தரவு அடங்கியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.