சாரதா நிதி நிறுவன மோசடியில் கொல்கத்தா நகர காவல்துறை ஆணையர் ராஜிவ் குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் சென்றனர். இதனை எதிர்த்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்தில் இறங்கினார். இந்த விஷயம் நாடு முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் மம்தாவுக்கு ஆதரவு கரம் நீட்டினர்.
இந்நிலையில் இதைப்பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை நடத்த, சி.பி.ஐ அதிகாரிகல் மேற்கொண்ட நடவடிக்கைகள் மீது தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்திருந்தாலோ, மாநில அரசின் அனுமதி இல்லாமலோ விசாரணை நடத்தியிருந்தால் தான் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் நீதித்துறை உத்தரவின் பேரில் தான் சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்கிறது. ஆக, இதனை மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்ற அவர்,
”திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல எம்.பி-க்கள் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து விசாரணை நடத்த பா.ஜ.க ஏன் 5 ஆண்டுகள் காத்திருந்தது? ஊழல் எம்.பி-க்களை தங்கள் பக்கம் இழுக்கவா?” என பா.ஜ.க-வையும் சாடினார்.
சி.பி.ஐ நடவடிக்கை, கொல்கத்தா நிதி நிறுவன மோசடி, மம்தா பானர்ஜி, சிபி.ஐ மீது தவறில்லை என்றார் சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,