அ.இ.அ.தி.மு. ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும் டெல்லியில் வசித்து வரும் ராமசாமிக்கும் இன்று காலை டெல்லி நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது.
அ.இ.அ.தி.மு.க. ராஜ்சபா உறுப்பினராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த போது, ஜெயலலிதா அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். ஆனால், அவர் ராஜ்யசபாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளிப்படையாக பேசினார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து விலக்கி வைத்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், டிடிவி.தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனை விவாகரத்து செய்தார். இன்று டெல்லியில் அவருக்கும் ராமசாமிக்கும் திருமணம் நடைபெறுவதாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த சத்யப்பிரியா என்பவர், ராமசாமி எனது கணவர். அவர் இரண்டாவது திருமணம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என போலீசிலும், கோர்ட்டிலும் வழக்குப் பதிவு செய்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட குடும்ப நல கோர்ட், ராமசாமியின் திருமணத்துக்கு தடை விதித்தது.
ஆனாலும் திட்டமிட்டப்படி சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணம் டெல்லியில் நட்சத்திர் ஓட்டலில் நடைபெற்றது. சசிலா புஷ்பா, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் குறித்து ராமசாமியிடம் கேட்ட போது, ‘‘சத்யபிரியாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது உண்மைதான். சத்யபிரியாவுக்கு ஏற்கனவே திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதல் கணவர் திண்டுக்கல் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதை டெல்லி கோர்ட்டில் சொல்லி, எங்கள் திருமணம் செல்லாது என்று உத்தரவு வாங்கியுள்ளேன்.
மேலும் 2015ம் ஆண்டு என்னுடைய மகள் அஞ்சலியை அடித்து உதைத்துக் காயப்படுத்தினார். இது தொடர்பாக டெல்லியில் புகார் கொடுத்தோம். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் என் மீது தவறான புகாரை கூறியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.