ஷீனா போரா கொலை வழக்கில் பல மாற்றங்களும் திருப்பங்களும் அரங்கேறி கொண்டே இருக்கிறது. இதில் குற்றவாளி இவர்தான் என மாறி மாறி கை காண்பித்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது ஷீனா போராவின் தாய் இந்திராணி முகர்ஜி, தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்காக என்னை இந்த கொலை வழக்கில் இழுப்பதாக அவரது கணவர் பீட்டர் முக்கர்ஜி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 15ம் தேதி, இந்திராணி நீதிமன்றம் முன் ஒரு மனுவை தாக்கல் செய்தார். தனது கணவரின் போன் கால் ரெக்கார்டுகளைப் பார்க்க வேண்டும் என்றும், அவர் தான் என் குழந்தையை ஏமாற்றி கடத்தி கொலை செய்து, அந்த பழியை என் மீது திருப்பியுள்ளார் என தெரிவித்திருந்தார்.
இந்திராணியின் மனுவிற்கு பதிலளித்த பீட்டர், நீதிமன்றம் ஆணையிட்டால் அதற்கு ஏற்ற ஆதாரங்களை சமர்பிப்பதாக சொல்லியிருந்தார். இந்திராணியின் இந்த மனு தன் புகழை கெடுத்துள்ளது எனவும் தனக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
“குற்றம் சாட்டப்பட்ட இந்திராணியின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கதக்கது. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். தன்னை இந்த கொலை வழக்கில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக என் பக்கம் திசை திருப்புகிறார் என தெளிவாக தெரிகிறது” என பீட்டரின் மனுவில் சொல்லப்பட்டுள்ளது.
இந்திராணியின் மனுக்கு சிபிஐ-யும் பதில் அளித்துள்ளது. “இந்த முக்கியமான நேரத்தில் இந்திராணியின் இந்த மனு வழக்கில் இருந்து திசை திருப்புவதாக உள்ளது. மேலும் இது இன்னும் நேரத்தை வீணடிக்கும்” என சிபிஐ தெரிவித்தது.
இந்த மனுவை கவனித்த, சிறப்பு நீதிபதி ஜே சி ஜக்தேல் வியாழக்கிழமை அன்று இந்திராணியின் வழக்கறிஞரிடம் இந்த மனுக்கான காரணத்தை விசாரித்தார். இந்த மனுக்கான காரணம் குற்றவாளியை கண்டுபிடிக்க ஆதாரமா அல்லது வழக்கு எண் 30ன் கீழ் ஒப்புதல் வாக்குமூலமா என கேள்வி எழுப்பினார். இது வாக்குமூலம் அல்ல கால் ரெக்கார்டை மட்டுமே கேட்க வேண்டும் என இந்திராணியின் வழக்கறிஞர் பதில் அளித்தார்.