மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுபான விடுதியை நடத்துகிறார் என்றும்
இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவாவில் உள்ள, சில்லி சோல்ஸ் கோவா என்ற மதுபான விடுதியை ஸ்மிருதி இரானியின் மகள் நடத்தி வருகிறார் என்றும் இதன் உரிமம் போலியானது என்றும், இந்த பாரின் உரிமமானது, 2021 மே மாதத்தில் உயிரிழந்த ஒருவர் பெயரில் இருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் பாவன் கேரா குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஸ்மிருதி இரானி பதவி விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனை ஸ்மிருதி இரானியின் மகள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிருதியின் மகள் கீரத் நக்ராவின் வழக்கறிஞர் பேசுகையில், “கோவாவில் உள்ள சில்லி சோல்ஸ் கோவா மதுபான விடுதிக்கு கீரத் நக்ரா உரிமையாளர் இல்லை. அவர் அதை எடுத்து நடத்தவும் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை” என்று கூறுகிறார்.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2024-ல் தனக்கு எதிராக அமேதியில் மீண்டும் போட்டியிட்டால் ராகுல் தோற்பது உறுதி என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். ”மேலும் ராகுல் காந்தியின் குடும்பத்திற்கு எதிராக நான் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, அவர்கள் செய்த 5,000 கோடி ஊழலைப்பற்றி கேள்வி எழுப்பினேன். இதற்கு பதிலாளாக அவர்கள் எனது மகளை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். இவர்களை நான் சட்டத்திற்கு முன்பு சந்திக்கிறேன். “ என்று அவர் தெரிவித்துள்ளார்.