முகுல் ரோஹத்கியை தொடர்ந்து ரஞ்சித் குமாரும் மத்திய அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் இந்த விலகல்கள் விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) இருந்த முகுல் ரோஹத்கி, அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார். அவருக்கு பதிலாக அந்த இடத்தில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை மத்திய அரசு நியமித்தது.
கே.கே.வேணுகோபால் விலகிய சுவடு மறையும் முன்பு மத்திய அரசு வழக்கறிஞர்கள் பட்டியலில் 2-வது பெரிய பதவியாக கருதப்படும், சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரும் ராஜினா செய்திருக்கிறார். அக்டோபர் 20-ம் தேதி (இன்று) ரஞ்சித் குமார் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறார். அவரது ஒரு வரி ராஜினாமா கடிதத்தில், ‘தனிப்பட்ட குடும்பச் சூழல்கள் காரணமாக எனது சொலிசிட்டர் ஜெனரல் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்’ என கூறியிருக்கிறார்.
ரஞ்சித் குமாருக்கு முன்பாக தமிழகத்தை சேர்ந்த மோகன் பராசரன் அந்தப் பதவியில் இருந்தார். 2014 ஜூனில் மோடி அரசு பதவியேற்றதும் அவர் ராஜினாமா செய்தார். அப்போது அவரது இடத்தில் நியமிக்கப்பட்டவர்தான், ரஞ்சித் குமார். ஏற்கனவே குஜராத் அரசின் வழக்கறிஞராக பல வழக்குகளில் ஆஜரானவர் ரஞ்சித் குமார்.
குறிப்பாக நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் அரசுக்காக வாதாடினார். தற்போது திடீரென அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோஹத்கியை தொடர்ந்து, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரும் ராஜினாமா செய்திருப்பது கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இருவருமே சொந்தக் காரணங்களையே தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.