வருமான வரி செலுத்துவதற்கும், பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் அவசியம் என சமீபத்தில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. மேலும், வருமான வரி செலுத்துவோர் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் எனவும், இதற்கான கடைசி தேதி ஜூன் 30 எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30 க்கு பிறகு நீட்டிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. ஏற்கனவே, ஆதார் எண் கட்டாயம் என்பது ஏற்புடையதல்ல என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால், மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் செயல் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், போலி ஆதார் எண்களை அடையாளம் காணவே இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மே 4 ம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷண் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி, இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. பான் கார்டுடன், ஆதார் எண் இணைக்காவிட்டாலும், பான் கார்டு செல்லும். பான் கார்டு பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கக்கூடாது. இது தொடர்பாக அரசியல் சாசன பெஞ்ச் முடிவு செய்யும் வரை இந்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.