டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது தமிழக விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ள மறுத்து வருகிறது.
இந்த நிலையில், திங்கள் கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, விவசாயி ஒருவர தற்கொலைக்கு முயற்சி செய்தார். சுப்ரமணியன் என்னும் அந்த விவசாயி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த விவசாயி அங்குள்ள ராம்மனோகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நடைபெற்ற போராட்டத்தின்போது, தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தங்களைத் தாங்களே செருப்பைக் கொண்டு அடித்து போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறும்போது: இந்தியாவில் பிச்சை எடுப்பவர்களை காட்டிலும், விவசாயிகளின் நிலை மிக மோசமாக உள்ளது என்றுவேதனை தெரிவித்தார்.