அரசு முறைப் பயணமாக லண்டன் சென்ற மோடிக்கு எதிராகத் தமிழர்கள் போராட்டம். தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்காத மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்திய அரசு முறைப் பயணமாக, மோடி கடந்த 16 தேதி புறப்பட்டு ஸ்வீடன் சென்றார். ஸ்வீடனில் இருநாட்டுப் பிரதமர்கள் சந்திப்பு, பன்னாட்டு மாநாடு மற்றும் ஸ்வீடன் வாழ் இந்தியர்கள் சந்திப்பை முடித்து பிரிட்டனுக்கு புறப்பட்டார். நேற்று லண்டன் சென்றடைந்த மோடியை வெளியுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வரவேற்றார். பின்னர் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை, பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இருநாட்டு உறவிகள், தீவிரவாதம் அடக்குமுறை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றார். பிரிட்டன் வரும் பிரதமர் மோடிக்கு எதிராகப் போராட்டம் தயார் நிலையில் உள்ளது என்றே ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி (GoBackModi)' என கோஷம் எழுப்பி லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மேலும் பலர் கலந்துகொண்டு வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க போலீஸ் பாதுகாப்பும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.