Covid-19 Cases Update: வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், நோய் பாதித்தவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், நோய் தாக்கியதாக சந்தேகம் ஏற்பட்டவர்கள் அல்லது நோய்த் தாக்குதல் கண்டறியப்பட்டவர்களுக்கு ஹோட்டல்கள், அடுக்குமாடி வளாகங்கள், விடுதிகளில் தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பகுதிக்கான வசதிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கூடுதல் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது.
வழிகாட்டுதல்கள் குறித்த மேலும் விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்:
இந்தியாவில் இதுவரை 56,342 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து 3390 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3.2 சதவீத நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை-யும், 4.7 சதவீதம் பேருக்கு அவசர சிகிச்சைப்பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1.1 சதவீதம் பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரையில், கொரோனா தாக்கியவர்களில் 16,540 பேர் குணம் பெற்றுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1273 பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து, குணமானவர்கள் எண்ணிக்கை 29.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது,மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் 3 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குணமடைந்து வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Updates : கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் 3 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குணமடைந்து வருகின்றனர்.
புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் புதுச்சேரியில் மதுபான கடைகள் இப்போது திறக்கப்படாது என்றும் ஊரடங்கு முடியும் 17-ம் தேதி வரை திறக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் 'ஒன்றிணைவோம் வா' பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். இந்த நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஸ்டாலினுடைய நடவடிக்கை கேலிக்குரியது என்று விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 4 பேர் உயிரிழந்தனர். இதனால், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு ஊரடங்கை அமல்படுத்துவதில் முன்களத்தில் இருக்கும் காவல்துறையினரில் இதுவரை 107 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல, தீயணைப்புத்துறையில் இதுவரை 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட நிலையில், காய்கறி கடைகள், சென்னை திருமழிசையில் தற்காலிகமாக மொத்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இருவரும் திருமழிசை சந்தையில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், எனது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல் வதந்தி; நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்று அமித் ஷா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குப்வாட் மாநிலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு சென்ற தமிழர்கள் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மீட்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். பிற இடங்களில் 33% பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பொருளாதார வல்லுனர்கள், தொழில்துறையினர், யுனிசெஃப் உறுப்பினர்கள் உள்ளிட்ட 24 பேர் குழுவில் இடம்பெறுவார்கள். இந்த குழு பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு 3 மாதத்திற்குள் அறிக்கை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுக்கடைகள் திறந்த முதல் நாள் ஏராளமானோர் மதுக்கடைகளில் குவிந்தனர். அடுத்த நாள் நிலை சரிசெய்யப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், சென்னையில் டீ கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படும் என்றும் பார்சல்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 17-ம் தேதி வரை பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் வருகிற 11-ம் தேதி முதல் டீ கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை திறக்கலாம். டீ கடைகளில் பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும். டீ கடைகளில் நின்றோ, அமர்ந்தோ தேநீர் அருந்த அனுமதி இல்லை. நிபந்தனைகளைக் கடைபிடிக்காவிட்டால் கடைபிடிக்காவிட்டால் உடனடியாக மூடப்படும் என எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் 320 பேர் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 5 மருத்துவர், 5 செவிலியர் மற்றும் 10 சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட 34 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஏற்கனவே ஈராண்டுகளுக்குநிறுத்தப்பட்ட நிலையில் 2019-20 க்கான நிதியையும் ரத்து செய்யும் மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு எதிரானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி MPக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா? என்று வினவியுள்ளார். மேலும், மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சார்மிக் ரயில்களில் ரயில் கட்டணம் செலுத்த இயலாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கட்டணங்களை ஏற்பாடு செய்யும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தை பகுதியில் சிலருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காகவும், விவசாயிகளுக்காகவும் சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் உள்ள துணைக்கோள் நகரத்தில் தற்காலிக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்படும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்தது.
நாளை முதல் அங்கு காய்கறி விற்பனையைத் தொடங்கும் நிலையில்,இன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையை நேரில் பார்வையிடுகின்றனர்.
216 மாவட்டங்களில் இதுவரை யாருக்கும் கோவிட் - 19 நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய்த் தாக்குதல் ஏற்படவில்லை. கடந்த 21 நாட்களில் 29 மாவட்டங்களில், யாருக்கும் புதிதாக நோய்த் தாக்குதல் கண்டறியப்படவில்லை. அதேபோல கடந்த 14 நாட்களில் 36 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய்த் தாக்குதல் ஏற்படவில்லை. கடந்த 7 நாட்களில் 46 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. .
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயங்கப்படும் சிறப்பு ரயில்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "2 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களை அடைய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேற்குவங்க மாநிலத்திற்கு திரும்ப மக்கள் ஆர்வமாக உள்ளனர். மத்திய அரசு முயற்சி செய்தாலும்,மாநில அரசிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட ஆதரவு கிடைக்கவில்லை" என்று அமித் ஷா குறிபிட்டுள்ளார்.
நீங்கள் எந்த ரயில்களையும் மாநிலத்திற்கு நுழைய அனுமதிக்கவில்லை. இது மேற்குவங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்யும் அநீதி. இது அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை உருவாக்கும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் மாவட்டத்தில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையோடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா தொற்று. அந்த மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. இதனால், மாவட்டத்தில் நோய் கட்டுபாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 110ஆக அதிகரிப்பு.
பிளாசிட் என்ற பன்முக மைய ஆய்வகப் பரிசோதனை முறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைக் கட்டுப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல் திறனைக் கண்டறிவதற்காக'' இந்தப் பரிசோதனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு கோவிட்-19 தேசிய நன்னெறிக் குழு (COVID-19 National Ethics Committee) ஏப்ரல் 29இல் அனுமதி அளித்தது.
இந்த பிளாசிட் ஆய்வகப் பரிசோதனை நடத்த 21 நிறுவனங்களை ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, ராஜஸ்தான், தமிழகம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் தலா 2, பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா, சண்டீகரில் தலா 1 மருத்துவமனைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், ஆன் லைன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது.
திருமழிசை தற்காலிக அங்காடியில் கொரோனா தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights