ரயில் பயணம் அவசரமாக மேற்கொள்ள இருக்கிறீர்களா? தட்கல் டிக்கெட் ஒன்றுதான் அதற்கு வழி. தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு முன் சில முக்கிய விஷயங்களை கடைபிடிக்க மறந்துறாதீங்க...
ரயில் பயணம் எப்போதும் சுகமான அனுபவம் தான். வெளியூர் பயணங்களுக்கு பெரும்பாலானோரின் தேர்வு ரயில் பயணமாகவே இருக்கும். செலவு குறைவு என்பதால் மட்டுமல்ல, ரயிலில் உள்ள வசதிகள் வேறு எங்கேயும் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை. இதன்காரணமாகவே, ரயில் பயணம் மேற்கொள்ள டிக்கெட் எடுப்பது என்பது தற்போதைக்கு குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, டிக்கெட் முன்பதிவு நிறைவுபெற்றுவிடுகின்றன.
இந்த நேரங்களில், ரயில் பயணங்கள் மேற்கொள்ள நமக்கு பெரிதும் உதவுவது தட்கல் ரயில் டிக்கெட் முறை தான் ஆகும்.
ரயில் தட்கல் டிக்கெட்டை, இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம், அதன் செயலி மூலமாகவே முன்பதிவு செய்ய முடியும்.
தட்கல் டிக்கெட், சாதாரண ரயில் டிக்கெட்டை விட கூடுதல் கட்டணம் கொண்டதாக இருக்கும். பயண தூரம், இருக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், இந்த கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தட்கல் டிக்கெட் எடுப்பதற்கான விதிமுறைகள்....
தட்கல் டிக்கெட் கட்டணம், பயண தூரம், இருக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பயணிகளின் சார்ட் தயாரிக்கப்படும்போது மேற்கூறிய காரணங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. சார்ட் தயாரிப்பு விதிகள் உள்ளிட்ட விபரங்களை, இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.indianrail.gov.in/ தெரிந்துகொள்ளலாம்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு எந்தவொரு அடையாள அட்டையும் தேவையில்லை. ஆனால், பயணம் மேற்கொள்ளும்போது ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமல்லாது, சதாப்தி உள்ளிட்ட உயர்தர ரயில்களில் பயணம் செய்யவும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில், நாள்தோறும் காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை, டிக்கெட் புக்கிங் ஏஜென்ட்டுகள் மற்றும் வெப் ஏஜென்ட்டுகள், தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தட்கல் டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்தால், பெரும்பாலும் பணம் திரும்ப தரப்படுவதில்லை. ஆனால், ரயில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டாலோ அல்லது ரயில் 3 மணிநேரங்களுக்கு மேல் தாமதமாக புறப்படும் பட்சத்தில், டிக்கெட் ரத்து அனுமதிக்கப்படுவதோடு, அதற்குரிய பணமும் திரும்ப வழங்கப்படுகிறது.
ஒரு பிஎன்ஆர் எண்ணில், 6 பயணிகள் இருக்கும் நிலையில், தட்கல் ரயில் டிக்கெட் முறையில், ஒரு பிஎன்ஆர்ரில் 4 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.