காஷ்மீரில் உள்ள தால் ஏரி அதன் அழகுக்கும், தூய்மைக்கும் பெயர்போனது. அழகுற மின்னும் காஷ்மீருக்கு ’மகுடத்தில் சூட்டிய அணிகலன்’ போன்றது தால் ஏரி. ஆனால், ஆக்கிரமிப்புகள், கழிவுபொருட்கள் கலப்பு, களைச்செடிகள் காரணமாக தால் ஏரி மாசடைந்துள்ளது.
எங்கெங்கிலும் பசுமை தோற்றம், மிதந்துவரும் படகுகள் என காட்சியளித்த தால் ஏரி, தற்போது குப்பையும் கூளமுமாக காட்சியளிக்கிறது.
சுற்றுலா பயணிகளால் இத்தகையை சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ள தால் ஏரியால், உள்ளூர் மக்கள் அவதியுற்று வருகின்றனர். மோசமடைந்து வரும் தால் ஏரியை காண சகிக்காமல், தான் சார்ந்துள்ள சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க நினைத்த 5 வயது சிறுமி ஜன்னத், அந்த ஏரியை தூய்மைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறாள்.
தன் தந்தையின் உதவியுடன் இந்த முயற்சியில் இறங்கியிருக்கும் சிறுமி ஜன்னத், தால் ஏரிக்கு வருபவர்களிடம் குப்பை தொட்டியை உபயோகிக்குமாறு அறிவுறுத்துகிறாள்.
“தால் ஏரியில் குப்பை தொட்டியை உபயோகிக்காமல் அதனை அசுத்தப்படுத்தக்கூடாது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அனைவரும் பல்வேறு விதமான குப்பைகளை அப்படியே ஏரியில் வீசுகின்றனர். அது, தால் ஏரியின் அழகை கெடுக்கிறது. அதனால், மக்கள் குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும்”, என்கிறாள் இந்த சிறுமி.
இச்சிறுமியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”இந்த சிறுமியை பற்றி தெரிந்துகொள்வது உங்கள் காலைப்பொழுதை அழகாக்கும். தூய்மைக்கான பேரார்வம்”, என பிரதமர் நரேந்திரமோடி பாராட்டியுள்ளார்.