கதிராமங்கலத்தில் எண்ணை கசிவு ஏற்பட்டது தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கதிராமங்கலத்தில் ஒரடி ஆழத்துக்கு ஆயிரம் சதுர அடி நிலம் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
கதிராமங்கலத்தில் எண்ணைக் கசிவு ஏற்பட்டு மக்கள் கடும் அச்சமடைந்தது குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதன் விபரங்கள் பின்வருமாறு:
மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி அதிகாரிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சேர்ந்து, எண்ணைக் குழாயில் ஏற்பட்ட கசிவுகள் குறித்து 30 ஜுன் 2017 அன்று ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின்போது 1000 சதுர அடி பரப்பளவில், ஒரு அடி ஆழத்துக்கு எண்ணைக் கசிவினால் மண் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
பாதிப்புக்கு உள்ளான மண் முழுமையாக அகற்றப்பட்டு, அருகில் உள்ள ஓஎன்ஜிசி குத்தாலம் எரிவாயு மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான நிலத்திலிருந்து மண் முழுமையாக அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதிய மண்ணை விவசாயத்துக்கு ஏற்ற வகையில் நிரப்பவும் ஓஎன்ஜிசி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எழுத்துபூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார்.