காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பியதால் இன்று அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. மாநிலங்களவை கூடியதும் அ.தி.மு.க எம்.பிக்கள் காவிரி விவகாரத்தை கையில் எடுத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன், சசிகலா புஷ்பா உள்ளிட்ட உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றுக் கூறி அவைத்தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவை முற்றுகையிட்டனர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி விவகாரம் மட்டுமில்லாது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே நீரவ் மோடி வங்கி மோசடியில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.