முத்தலாக் தடை சட்டம் மக்களவையில் நிறைவேறியது. இதன் மூலம் ஒரே நேரத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
முத்தலாக் என்கிற முறையில் விவாகரத்து பெறும் நடைமுறை இஸ்லாமியர்கள் மத்தியில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் கடிதம் மூலமாகவோ, இ மெயில் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோகூட மூன்று முறை ‘தலாக்’ கூறி சில இடங்களில் இந்த விவாகரத்து அமுல்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
முத்தலாக் முறைக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தும் வகையில், ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் இன்று ( டிசம்பர் 28) மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். ‘இந்த மசோதா நிறைவேற்றப்படும் நாள், வரலாற்று சிறப்புமிக்க நாள்’ என ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.
முத்தலால் மசோதாவில், ‘3 ஆண்டுகள் சிறை தண்டனை நீக்கம்’ உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டன. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக எம்.பி அன்வர்ராஜா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பை இந்த மசோதா அதிகமாக கேள்விக்குறியாக்கும் என்றார் அவர். முத்தலாக் மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அன்வர்ராஜா கோரிக்கை வைத்தார்.
அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்கள் விவாதத்திற்கு பிறகு, இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரே தடவை மூன்று முறை முத்தலாக் கூறி விவகாரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்யும்.
மக்களவையில் காங்கிரஸ் இந்த மசோதாவை ஆதரித்தது. அந்தக் கட்சியின் சல்மான் குர்ஷித் மசோதாவை ஆதரிப்பதாகவும், ஆனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பை இதில் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தவிர, ஆண்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்வதை கைவிட வலியுறுத்தினார். இந்த மசோதாவை உடனடியாக வாக்கெடுப்புக்கு விடாமல், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பலாம் என்றும் சல்மான் குர்ஷித் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது கோரிக்கைகள் ஏற்கப்பட வில்லை.
அதிமுக.வை தவிர பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஓவைசி தலைமையிலான கட்சி ஆகியன இந்த மசோதாவை எதிர்த்தன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். அங்கு இந்த மசோதாவுக்கு கடும் சவால் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பாஜக எம்.பிக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்படும் என நம்புவதாக கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.