முத்தலாக் தடை சட்டம் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இச்சட்டத்தின் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
அதன்படி, இஸ்லாமிய மத வழக்கப்படி முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் கிடைக்கும்படி சட்ட முன்வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. நேரிலோ, எழுத்துப்பூர்வமாகவோ, வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட எந்த தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் முத்தலாக் கூறக்கூடாது. மேலும், கணவர் முத்தலாக் கூறினால் மனைவி உடனடியாக நீதிமன்றம் செல்லவும், தனக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் கோரவும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தன் பாதுகாப்பில் வளர்க்கவும் முஸ்லிம் பெண் கோருவதற்கு இந்த சட்ட முன்வரைவு வழிவகை செய்கிறது.
இந்த சட்ட முன்வரைவு கடந்த 28-ஆம் தேதி மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த சட்ட முன்வரைவை அதிமுக.வை தவிர பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஓவைசி தலைமையிலான கட்சி ஆகியன இந்த மசோதாவை எதிர்த்தன.
இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் இதனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளது.