Advertisment

டிடிவி தினகரன் கைதான டெல்லி வழக்கு : மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு முன் ஜாமீன்

டிடிவி தினகரன் கைதான டெல்லி வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. டிடிவி தினகரனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil,

Tamil Nadu news today in tamil,

டிடிவி தினகரன் கைதான டெல்லி வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. டிடிவி தினகரனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Advertisment

டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை அதிமுக அம்மா அணிக்கு பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு (2017) ஏப்ரல் 16-ம் தேதி கைதானார். அவரிடம் இருந்து பெரும் தொகை பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் இன்னும் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.

டிடிவி தினகரன் வேறு சில நபர்கள் மூலமாக சுகேஷ் சந்திரசேகருக்கு லஞ்சப் பணத்தை பரிமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது. டிடிவி தினகரன் இதே வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி கைது செய்யப்பட்டு, ஜூன் 1-ம் தேதி ஜாமீனில் விடுதலை ஆனார். 2017 ஜூலை 14-ம் தேதி 701 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை டெல்லி போலீஸார் தாக்கல் செய்தனர்.

டிடிவி தினகரன் பெயர் அதில் இல்லை. ஆனால் 2017 டிசம்பர் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன், அவரது நெடுநாள் நண்பர் மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகர் மற்றும் 6 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றன.

டிடிவி தினகரன் மீது குற்றச் சதி(120பி), 201 (ஆதாரங்களை அழித்தல்) மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியரை ஊழலுக்கு பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக கடந்த மாதம் டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி அவர் நேற்று (மார்ச் 13) ஆஜரானார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆஜரானவரான சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.குமார் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவர் தனக்கு முன் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 50,000 ரூபாய் தனி நபர் ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர்களின் ஜாமீன் உத்தரவாதம் பெற்றுக்கொண்டு முன் ஜாமீனில் விடுவித்து தனி நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரிக்க அனுமதி கோரி வருமான வரித் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் கூறவிருக்கும் தகவலைப் பொறுத்து டிடிவி தினகரனுக்கும் சிக்கல் உருவாகும் என்கிறார்கள்.

 

Ttv Dhinakaran Sukesh Chandrashekhar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment