ஸ்ரீநகரில் நேற்றிரவு காவல் துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில், இருவர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் ஒரு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் மீதான முதல் பெரிய தாக்குதல் இதுவாகும். அதே ஆண்டில், பிப்ரவரியில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் புல்வாமா கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தாக்குதல் குறித்த விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் இரங்கல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
காவல் துறை கூற்றுப்படி, ஆயுதப் பிரிவின் 9 வது பட்டாலியனின் காவல் துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 16 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பாதாமிபாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இரண்டு போலீசார் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் ஒருவர் உதவி காவல் ஆய்வாளர் என்றும் மற்றவர் கான்ஸ்டபிள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்கூட்டியில் வந்த மூன்று பயங்கரவாதிகள், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இரவு நேரம் என்பதால், எளிதாக தப்பியுள்ளனர்.
இருப்பினும், இந்த தாக்குதலின் போது பயங்கரவாதி ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்தாண்டு காவல்துறை அதிகாரிகள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
புள்ளிவிபரங்களின்படி, இந்தாண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல்களில் 19 போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன், பந்திப்பூரில் இரண்டு போலீசாரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil