உத்தரபிரதேச மாநிலத்தில் வாங்கிய கடனை திருப்பித்தர தாமதமானதால் தனியார் நிதி நிறுவன ஏஜெண்டுகள், விவசாயி ஒருவரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே அமைந்துள்ள சீதாபூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கியான் சந்திரா என்பவர், தனியார் ஃபைனான்சியரிடம் டிராக்டர் வாங்குவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில், கடன் முழுமையையும் அடைக்க கியான் சந்திரா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்த வேண்டியிருந்தது. இந்த தொகையில், 35 ஆயிரம் ரூபாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு செலுத்தியுள்ளார். மீதமுள்ள தொகையை செலுத்த சில நாட்கள் தாமதமானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அந்நிதி நிறுவனத்தை சேர்ந்த ஏஜெண்டுகள் 5 பேர் கியான் சந்திராவின் டிராக்டரை எடுத்துச்செல்ல வந்துள்ளனர். அப்போது, கியான் சந்திரா வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அவர்கள் கியான் சந்திராவை கீழே தள்ளிவிட்டு அவர் மீது டிராக்டரை ஏற்றிக் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.