பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் கார் மீது மற்றொரு கார் மோதியதில், அவர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். இருப்பினும், அவரது கார் பெருத்த சேதத்திற்கு உள்ளானது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதுமே பெரும் புகழை அடைந்தவர் வித்யா பாலன். அத்திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் வித்யா பாலன் இடம் பிடித்தார். இத்திரைப்படத்திற்கு வித்யா பாலன் தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் நடித்துள்ள தும்ஹர் சுலு திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் முடிந்து ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ராவுக்கு குறிப்பிட்ட வேலை தொடர்பாக தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்புறத்தில் வந்த மற்றொரு கார், வித்யா பாலனின் கார் மீது மோதியது.
இந்த விபத்தில், அவரது கார் பெருத்த சேதமடைந்தது. இருப்பினும், வித்யா பாலன் சிறு காயங்களுமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து டி.என்.ஏ. செய்தி நிறுவனம், ”நடிகை வித்யா பாலன் நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்தவித காயங்களும் இல்லை. இது ஒரு சிறிய விபத்து. அவருடைய கார் மட்டும்தான் சேதமடைந்திருக்கிறது”, என வித்யாபாலனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.