ஜோத்பூரில் பிரசவ அறையில் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, மருத்துவர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலட்சியமாக இருந்ததால், குழந்தை இறந்தநிலையில் பிறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ அறையில் சிசேரியன் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துகொண்டிருந்தனர். அப்போது, பிரசவ அறையில் இருந்த மருத்துவர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலட்சியமாக இருந்தனர். இதன் காரணமாக குழந்தை இறந்தே பிறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அச்சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், “குழந்தையை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே குழந்தை ஆபத்தில் இருந்தது. அதன் இதயத்துடிப்பு குறைவாக இருந்தது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்”, என கூறினார்.
இதனிடையே, இதற்கு காரணமான இரு மருத்துவர்களும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக, அந்த மருத்துமனையை நிர்வகிக்கும் சம்பூரானந்தா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஏ.எல். பட் கூறினார்.
“இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. அறுவை சிகிச்சை அறையை அவமரியாதை செய்வது போன்றதாகும்.”, என அவர் கூறினார்.
”இதனை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் அளிக்கும் விசாரணை அறிக்கையின்படி, அவர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”, என ஏ.எல்.பட் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் வீடியோவை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில், பிரசவ அறையில் மருத்துவர்கள் இருவர் இந்தி மொழியில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அதில் ஒருவர் மகப்பேறு மருத்துவர் அசோக் நெனிவால், மற்றொருவர் மயக்கவியல் மருத்துவர் எம்.எல்.தாக் என்பது தெரியவந்தது. எதற்காக அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை.
#WATCH Rajasthan: Verbal spat between two doctors in OT during the surgery of a pregnant woman in Jodhpur's Umaid Hospital (29.8.17) pic.twitter.com/eZfHHISQGB
— ANI (@ANI) 30 August 2017
இதனை, மருத்துவமனை ஊழியர் ஒருவர் தன் செல்ஃபோனில் வீடியோ எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. பிரசவ அறையில் செல்ஃபோன்களை எடுத்துச் சென்றால் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், அதற்கு தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.