அயோத்தி விவகாரத்தை வெறும் நிலத்தகராறு வழக்காகவே விசாரிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, நிலத்தை ராமலீலா அமைப்பினர், நிர்மோகி அகரா அமைப்பினர், சன்னி வக்பு வாரியம் ஆகிய 3 அமைப்பினருக்கும் சரிசமமாக பங்கிட்டு தர வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து, அயோத்தி தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கின் விசாரணை நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றபோது, அலகாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும், வீடியோ பதிவுகளையும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையை மார்ச் 14-ஆம் தேதி நடத்தவிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தினசரி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில், வழக்கை வெறும் நிலத்தகராறு வழக்காக மட்டுமே விசாரிக்கப்போவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.